என்ன செய்யப் போகிறது அரசு / உண்மை என்ன?
பொதுவாக காலண்டர் என்பது எல்லோருக்கும் பயன்படுவது. இந்த காலண்டர் ஆண்டு என்பது ஜனவரி முதல் டிசம்பர் வரை ஆகும். இதன் உள் அடங்கியது நிதி ஆண்டு (financial year). இது ஏப்ரல் முதல் மார்ச் வரை ஆகும். கல்வியாண்டு என்பது ஜூன் தொடங்கி மே முடிய நடைபெறும். இந்த கல்வியாண்டில் மூன்று பருவங்கள் உண்டு. முதல் பருவம் ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் வரை. இரண்டாம் பருவம் என்பது அக்டோபர், நவம்பர், டிசம்பர். மூன்றாம் பருவம் என்பது ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகும். இதில் நெடிய பருவம்(long term) என்று அழைக்கப் படுவது முதல் பருவம் தான். இதில் இப்போது ஏறக்குறைய 11/2 மாதங்கள் முடிந்த நிலையில் பாடத்திட்டமும் புத்தகமும் எப்பொழுது கிடைக்கப் பெற்று பாடங்களை ஆசிரியர்கள் நடத்துவது. மாணவர்கள் நிலை என்ன. தேர்வுகள் தள்ளிப்போகுமா அல்லது தேர்வே இவ்வாண்டு இருக்காதா, அப்படி இருந்தால் புத்தகம் முழுமையும் உள்ள பாடங்களில் இருந்து வினாக்கள் வருமா அல்லது 25% பாடங்கள் இந்த ஆண்டு மட்டும் விலக்கு அளிக்கப் படுமா என்பன போன்ற எண்ணற்ற வினாக்குறிகள் பெற்றோர் மாணவர்கள் மத்தியில் எழும்பிய வண்ணம் உள்ளது. யார் பொறுப்பேற்று பதில் தருவார்கள் என்பது கேள்விக்குறியே.
சமச்சீர் கல்வி என்பது எல்லோருக்கும் ஒரே பாடத்திட்டம் என்ற அடிப்படைத் தத்துவத்தைக் கொண்டதில் என்ன தவறு இருக்கிறது. மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், எஸ்.எஸ்.எல்.சி படிக்கும் மூன்று வகை மாணவர்களும் +1, +2 வில் சமச்சீர் கல்விதானே பயில்கின்றார்கள். தனித் தனியே அவர்களுக்கு என்று +1,+2 வில் பாடத்திட்டம் இல்லை என்பதும் அதை வைத்துத் தான் மேற்படிப்புகள் படிக்கின்றனர் என்பதும், 1முதல் 10 வரை படிப்பதற்கும்+1, +2 வில் படிப்பதற்கும் பெரும்பான்மை பாடங்கள் வேறு பட்டுள்ளது என்பது யாருக்கும் தெரியாத செய்தியா. அப்படி இருக்கும் பட்சத்தில் மெட்ரிக் பள்ளிகள் அர்த்தமற்ற கூப்பாடு போடுவது ஏன். தங்கள் சரக்கினை நல்ல விலைக்கு விற்க முடியாது என்பதாலா, உண்மையிலேயே இவர்களுக்கு மாணவர் மேல் அக்கறை இருக்குமானால் CBSE பாடத்திட்டதில் +1, +2 வகுப்புகள் அல்லவா நடத்த வேண்டும்.+1, +2 க்கு மட்டும் ஏன் ஒருங்கிணைந்த தமிழ் நாடு பாடத்திட்டதை பின் பற்ற வேண்டும். மெட்ரிக் பாடத்திட்டதினை பயின்றவர்களுக்கு தற்பொழுது உள்ள தமிழ் நாடு +1, +2 பாடத்திட்டங்கள் எளிமையாகிவிடும். அதனால் மதிப்பெண் கூடுதலாக எடுப்பார்கள். அதை வைத்து மெட்ரிக் படித்தவர்கள் தான் +1,+2 வில் அதிக மதிப்பெண் எடுத்து இஞ்சினியரிங், டாக்டர் படிப்புகளுக்கு போக முடியும் என்று விளம்பரப் படுத்தி வியாபாரம் செய்யும் போக்குடனே மெட்ரிக் பள்ளிகள் நீலிக்கண்ணீர் வடிக்கின்றன. எஸ்.எஸ்.எல்.சி படித்தவர்களாலும் +1, +2 வில் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதே சமச்சீர் கல்வியின் நோக்கம்.
பாடத்திட்டத்தை ஆராய்ந்த குழுவின் அறிக்கை என்னவோ வேடிக்கையாகவும் நகைச்சுவையாகவும் இருக்கிறது. எல்லா பாடங்கÙõ தரம் தாழ்ந்தவை என்கிறார்கள். இதற்கு அவர்களின் அளவுகோல் எது என்பதைக் கூறவில்லையே. எப்பொழுது பாடத்திட்டம் தையாரிக்கப் பட்டாலும் இந்த நிலை நீடிக்கத்தான் செய்யும். நன்கு படிக்கும் மாணவர்களையும் Below average மாணவர்களையும் கொண்டு தான் பாடத்திட்டம் தயாரிக்க முடியும். இதில் என்ன கண்டு பிடிப்பு சில பாடங்களை ஆசிரியர்கள் விளக்கினால் தான் மாணவர்களால் புரிந்து கொள்ளும் நிலை உள்ளது என்கிறார்கள்.அதற்கு தானே 30 ஆயிரம் 40 ஆயிரம் ஊதியம் கொடுத்து அவர்களை வைத்துள்ளார்கள். முதலில் தரமற்ற பாடத்திட்டம் என்று கூறும் குழு இறுதியில் மெட்ரிக் பாடத்தை அப்படியே பின்பற்றுகிறார்கள் என்று கூறுகிறது. அப்படியானால் இவ்வளவு காலம் பின்பற்றிய மெட்ரிக் பாடம் தரமற்றதாக இருந்ததா. மேலும் மனப்பாடம் செய்யும் தன்மையிலேயே பாடத்திட்டம் உள்ளது என்கிறார்கள். சிந்தனையை தூண்டும் விதத்த்தில் அமையவில்லை என்கிறார்கள். அனைவரும் மனசாட்சி தொட்டு சொல்லுங்கள் இன்று வரை நமது பாடத்திட்டம் அப்படித்தானே உள்ளது. அதனால் தான் தனியார் பள்ளிகள் பாடம் நடத்தாமல் கேள்வி பதில் மட்டுமே நடத்தி அதை மனப்பாடம் செய்ய வைப்பதிலே முனைப்பு காட்டி வருவது அனைவரும் அறிந்த ஒன்று. மேலும் ஒன்றாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்கள் சென்ற ஆண்டு சமச்சீர் பாடத்தை பயின்று விட்டார்கள். அவர்கள் 2,7 வகுப்புகளில் உள்ளார்கள். அவர்களுக்கு இந்த ஆண்டு சமச்சீர் கல்வி புகட்டுவது தானே நியாயம். ஆண்டுக்கொரு பாடத்திட்டம் வைத்தால் மாணவர்கள் நிலை என்ன? சிந்திக்க மறுக்கும் அரசுக்கு எடுத்துக் கூறுவது யார்?
200 கோடி பணம் மட்டும் முடக்கப்படவில்லை. அதில் எத்தனை ரசாயன கலர் பொருட்கள் அச்சடிக்கப் பட்டுள்ளது. எந்த அளவிற்கு காற்று மாசு அடைந்து இருக்கும். எத்தனை கோடி மரங்கள் வெட்டப் பட்டு அந்த காகிதம் தையாரிக்கப் பட்டது. சுற்றுச் சூழலுக்கு எவ்வளவு இடையூறுகள். மீண்டும் 200 கோடிக்குரிய காகிதங்கள் வீணடிக்கப் பட்டால் மரங்கள் நிலை என்ன யார் சிந்திப்பது. சுற்றுச்சூழல் பாதிப்பைப் பற்றியோ, மரங்கள் அழிவது பற்றியோ, மாணவர்கள் பற்றியோ யாரும் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. மத்திய அரசு மானியம் கொடுக்கப் போகிறது, வரியை மக்கள் கட்டப் போகிறார்கள்.மரங்கள், மாணவர்கள், சுற்றுச்சூழல் என எல்லாம் 'கெட்டாலும் பரவாயில்லை ஆனால் நாம் நினைத்ததை முடிப்போம்' என்ற மனப்போக்கு தேவையா?
No comments:
Post a Comment